தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :10



அறிவிப்பாளர்களின் அறிவிப்பு விதம்:

இந்த அறிவிப்பின் முக்கிய முதன்மை அறிவிப்பாளர்களான அபூஉமைரும், அவரிடமிருந்து தனித்து அறிவித்துள்ள அபூ பிஷ்ரும் பலவீனமாகி விட்டனர் என்ற நிலையில் அவர்கள் மூலமாக அவர்களுக்கு பின்னர்வரும் அறிவிப்பாளர்கள் ரிவாயத்து செய்யும் விதங்கள் பற்றியும் சற்று ஆராய்வோம்.

இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பை அபூபிஷ்ர் அவர்களிடமிருந்து ஹூஸைம், ஷூஃபா, அபூ அவானா என மூன்று நபர்கள் அறிவிக்கின்றனர். மேற்கண்ட அறிவிப்பை நபி (ஸல்) அவர்கள் (அமரன்னாஸ்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும், இல்லை இல்லை (அமரஹூம்) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் அறிவித்து அம்மூவரும் தங்களுக்குள் முரண்படுகிறார்கள்.

இம்மூவருக்கும் பலஹீனமான அபூஉமைரின் இந்த அறிவிப்பை ரிவாயத்து செய்தது அபூபிஷ்ர் என்ற ஒருவர்தாம் என்பதையும் கவனத்தில் கொள்க. அவர்களின் அறிவிப்புகள் பின்வருமாறு.

1) ஹூஸைம் அவர்களின் மேற்கண்ட அறிவிப்பு (அமரன்னாஸ்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற ரீதியில் முஸ்னத் அபீ ஷைபா, முஸ்னத் அப்துர் ரஜ்ஜாக் போன்ற நூல்களில் இடம் பெறுகின்றன.

(இருப்பினும் ஹூஸைம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரது மாணவர்களில் சிலர் ஹூஸைம் அமரன்னாஸ் என்று தங்களுக்கு அறிவித்ததாகவும், வேறு சிலர் அமரஹூம் என்று அறிவித்ததாகவும், இன்னும் ஒருவர் இரண்டு விதத்தில் அறிவித்ததாகவும் பதிவு செய்கிறார்கள்.)

2) ஷூஃபா அவர்களின் ரிவாயத்தானது (அமரஹூம்) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று படர்க்கையில் பைஹக்கீ (ஸூனனுஸ் ஸகீர்) நூலில் இடம்பெறுகிறது.

3) அபூ அவானா அவர்களோ (அமரன்னாஸ்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற பைஹக்கீயின் அறிவிப்பில் அலி இப்னு முஹம்மத் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என பைஹக்கீ இமாம் குறிப்பிட்டுவிட்டார்கள்.

மேற்கண்ட அறிவிப்புகளின் படி பைஹக்கியில் இடம்பெறும் அபூ அவானா அவர்களின் அறிவிப்பை பைஹக்கீ இமாம் அவர்களே முக்கியத்துவம் அளிக்காமல் தட்டிவிட்டுவிட்டதால் இனி ஹுஸைம் மற்றும் ஷுஃபா ஆகிய இருவரின் ரிவாயத்துகளை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

ஹுஸைமிடமிருந்து ரிவாயத் செய்தவர்கள் மொத்தம் 7 நபர்கள்

இதில் மக்களுக்கு கட்டளையிட்டார்கள் (அமரன்னாஸ்) என்று அறிவிப்பவர்கள் நான்கு நபர்கள்.

1)அப்துர் ரஜ்ஜாக் (முஸன்னஃப்)

2) இப்னு அபீ ஷைபா (முஸன்னஃப்)

3)இமாம் அபூ குரைப் (தஃதீபுல் ஆதார்)

4) இமாம் அஹ்மத் (முஸனத் அஹ்மத்)

அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் (அமரஹூம்) என்று அறிவிப்பவர்கள் மூன்று நபர்கள்.

1) யஹ்யா இப்னு யஹ்யா (ஷரஃ மஆனில் ஆதார்)

2) ஸையித் (ஷரஃ மஆனில் ஆதார்)

3) இப்னு அபீ ஷைபா (முஸன்னப்)

அமரன்னாஸ், மற்றும் அமரஹூம் இந்த இரண்டும் இல்லாமல் பொதுவாக அறிவித்தவர் ஒருவர்

1) ஷியாத் இப்னு அய்யூப் (முன்தகா)

இதில் இப்னு அபீ ஷைபா அவர்கள் அமரன்னாஸ் என்று ஒருமுறையும் அமரஹூம் என்று பிறிதொருமுறையும் அறிவித்துள்ளார்கள்.

ஷூஃபாவிடமிருந்து ரிவாயத்து செய்தவர்களில் பல நபர்கள் படர்க்கையாக அறிவித்துள்ளார்கள்.

இந்த படர்க்கையாக அறிவித்துள்ள நபர்களில் விரிவாக அறிவித்தவர்கள் சுமார் 12 நபர்கள், சுறுக்கமாக அறிவித்தவர்கள் 5 நபர்கள்

ஹூஸைம் அவர்கள் (அமரன்னாஸ்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கின்றார்கள். இந்த அமரன்னாஸ் என்ற அறிவிப்பை வைத்துதான் சர்வதேசப் பிறையை ஆதரிப்பவர்கள் பிறஇடங்களில் பிறை பார்த்தத் தகவலை வைத்து நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களுக்கும் பெருநாள் தொழுவதற்குக் கட்டளையிட்டு விட்டார்கள். எனவே தங்களின் சர்வதேச பிறை நிலைபாட்டிற்கு இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு ஆதாரம் என்று கூறுகின்றனர்.

ஆனால் ஷூஃபா அவர்களோ (அமரஹூம்) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என அறிவிக்கிறார்கள். இதில் அமரஹூம் என்ற சொல் வாகனக்கூட்டத்தை மட்டுமே குறிக்கும். அவர்கள் பிறை பார்த்ததால் அவர்களை மட்டும்தான் பெருநாள் திடல் நோக்கி செல்லுமாறு நபிகளார் கட்டளையிட்டார்கள் என்றும் இது ஸஹாபாக்களுக்கோ, அல்லது அனைத்து மக்களுக்கோ பொதுவான அறிவிப்பு இல்லை என தத்தம்பகுதி பிறையினர் இந்த அறிவிப்பை தங்களுக்கு சாதகமான ஆதாரம் எனக் கூறுகின்றார்கள்.

இதில் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் சொல்வது என்னவென்றால் முதலில் மேற்கண்ட இரண்டு நிலைபாட்டிலும் உள்ளவர்கள் மேற்படி அறிவிப்பு தத்தம்பிறைக்கு ஆதாரமா? அல்லது சர்வதேசப்பிறைக்கு ஆதாரமா? யாருடைய நிலைபாடு சரி என்ற முடிவிற்கு முதலில் அவர்கள் வரவேண்டும். இன்னும் நோன்பை விட்டுவிடுங்கள் என்ற கட்டளை வாகனக்கூட்டத்திற்கு மட்டுமா? வாகனக்கூட்டம் மற்றும் ஸஹாபாக்களுக்கும் சேர்த்துதான் குறிக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் முடிவெடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

காரணம் நபி (ஸல்) அவர்களை எங்கள் உயிரினும் மேலாக மதிப்பதாலும், சங்கைக்குரிய நபித்தோழர்கள், தாபியீன்கள், ஹதீஸ்களை தொகுத்த மாமேதைகளான இமாம்கள், அதற்காக கடும் சிரமங்களை மேற்கொண்டவர்கள் (அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் செய்யட்டும்) என்று அவர்கள் அனைவர்மீதும் நாங்கள் நல்லெண்ணம் கொள்வதாலும் அவர்கள் அனைவரின் பெயரைக் கெடுக்கும் வண்ணம் புனையப்பட்டுள்ள மேற்படி வாகனக்கூட்டம் அறிவிப்பு பலவீனமானதுதான் என்கிறோம்.

ஷூஃபா அவர்கள் அறிவித்ததாக வரும் இன்னும் சில செய்திகள்

மேற்கண்ட ரிவாயத்தை பல குளறுபடியான அறிவிப்பாளர்கள் தொடர் மூலம் ஷுஃபா அவர்கள் அறிவித்ததாக கீழ்க்காணும் கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தஹ்கீக் ஃபீ மஸாயிலல் ஹிலாஃபி லி இப்னு ஜவ்ஸி (التحقيق في مسائل الخلاف لابن الجوزي » كِتَابُ الصَّلَاةِ » مَسَائِلُ الْعِيدِ رقم الحديث: 832 ) என்ற புத்தகத்தில் கிதாபுஸ்ஸலா என்ற அத்தியாயத்தில், மஸாயிலுல் ஈத் என்ற பாடத்தில் வரும் 832 வது அறிவிப்பும் இதே வாகனக்கூட்டம் சம்பந்தமானது தான். இதன் அறிவிப்பானது முறையே

(حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَنَسٍ ، عَنْ أَبِي عُمَرَ بْنِ أَنَسٍ ، عَنْ عُمُومَتِهِ مِنْ أَصْحَابِ النَّبِي).என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அபூ உமர் இப்னு அனஸ் அவர்கள் அறிவித்த இச்செய்தி அனஸ் என்பவரின் வாயிலாக ஷுஃபா அவர்களுக்குக் கிடைத்தாக வந்துள்ளது.

இதன் அறிவிப்பானர் வரிசை முறையே

1. அபூஉமர இப்னு அனஸின் உமூமத்

2. அபூ உமர் இப்னு அனஸ்

3. அனஸ்

4. ஷுஃபா என்பதாகும்.

இன்னும் (بَابُ ذِكْرِ مَا احْتَجَّ بِهِ الْمُخَالِفُ مِنَ ... » بَابُ ذِكْرِ مَا احْتَجَّ بِهِ الْمُخَالِفُ مِنَ الْأَخْبَار ... رقم الحديث : 1178). பாபுத்திக்ரு மாஇஹ்தாஜபிஹில் முகாலிபு மின் அஹ்பார் என்ற புத்தகத்தில் 1178வது செய்தியாக பதியப்பட்டுள்ள மேற்படி வாகனக்கூட்டம் அறிவிப்பானது முறையே (قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي بِشْرِ بْنِ عُمَيْرِ بْنِ أَنَسٍ ، عَنْ عُمُومَةٍ لَهُ). என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷுஃபா அவர்கள் பதிவுசெய்த இந்த அறிவிப்பை உமைரின் மகன் அபூபிஷ்ரு அவர்கள் அறிவித்ததாகவும், இச்செய்த அபூபிஷ்ரின் உமூமத்தின் வாயிலாக பெறப்பட்டது என்ற தகவலை இங்கு காண்கிறோம். இதன்

அறிவிப்பானர் வரிசை முறையே

1. அபூபிஷ்ரின் உமூமத்

2. உமைரின் மகன் அபூபிஷ்ரு

3. ஷூஃபா என்பதாகும்.

அதுபோல (بَابُ ذِكْرِ مَا احْتَجَّ بِهِ الْمُخَالِفُ مِنَ ... » بَابُ ذِكْرِ مَا احْتَجَّ بِهِ الْمُخَالِفُ مِنَ الْأَخْبَار ... رقم الحديث : 1113 ) என்ற அதே புத்தகத்தில் 1113வது செய்தியாக பதியப்பட்டுள்ள இதே வாகனக்கூட்டம் அறிவிப்பானது முறையே (قَالَ : وَحَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسِ ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ بْنِ مَالِكٍ ، عَنْ عُمُومَتِهِ مِنْ أَصْحَابِ) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அபூஉமைர் இப்னு அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்த இச்செய்தி ஜஃபர் இப்னு இயாஸ் என்பவரின் வாயிலாக ஷூஃபா அவர்களுக்கு கிடைத்தாக வந்துள்ளது. இதன் அறிவிப்பானர் வரிசை முறையே

1. அபூஉமைர் இப்னு அனஸ் இப்னு மாலிகின் உமூமத்

2. அபூஉமைர் இப்னு அனஸ் இப்னு மாலிக்

3. ஜஃபர் இப்னு இயாஸ்

4. ஷுஃபா என்பதாகும்.

ஷூஃபா அவர்கள் அறிவிக்கும் ரிவாயத்துகளில் எந்த அறிவிப்பாளர் வரிசை சரியானது? ஒரே புத்தகத்தில் பதியப்பட்டுள்ள அறிவிப்பாளர்கள் வரிசையிலேயே இத்தனை குளறுபடிகள் ஏன் உள்ளன? உண்மையில் யாருடைய உமூமத்திலிருந்து இச்செய்தி அறிவிக்கப்பட்டது? என்பதையெல்லாம் மாற்றுக் கருத்துள்ளவர்கள்தாம் விளக்கவேண்டும்.

காரணம் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நம்மைப் பொறுத்தவரையில் வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் இந்த அறிவிப்பு பலவீனம் என்பதையும் தாண்டி இட்டுக்கட்டப்பட்டது என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. நம்மைப் பொறுத்தவரை மேற்கண்ட இந்த அறிவிப்பு எத்தகைய பிறை நிலைபாட்டிற்கும் ஆதாரமாகாது. மாறாக நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டது என்பதற்கு வேண்டுமானால் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம் என திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.

வாகனக்கூட்டம் ஹதீஸ் என்று மக்களிடம் பிரபலமாக பிரச்சாரம் செய்யப்பட்ட இந்த பலஹீனமான செய்தியை, ஸஹீஹான ஹதீஸ் என்று மிக இலகுவாக நிறுவிவிடலாம் என்று மாற்றுக் கருத்துடையோர் நினைத்துக் கொண்டார்கள் போலும். ஒரு ஹதீஸ் ஸஹீஹானது என்பதற்கு இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் விதித்த நிபந்தனைகளை சுறுக்கமாக சுட்டிக்காட்டுவது இங்கு பொறுத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம். அவைகளாவன

1. அறிவிக்கப்படும் அச்செய்தியின் அறிவிப்பாளர் தொடர் முறியாமல் இருக்க வேண்டும்.

2. அந்த அறிவிப்பாளர்கள் அதிக மனன சக்தியும், சீரிய அறிவாற்றலும் கொண்டிருக்க வேண்டும்.

3. அறிவிப்பாளர் தன் சொந்த குணநலன்களில் மிகவும் மேம்பட்டவராகவும், மிகச் சிறந்த இலக்கியத் தரமும், உயர் கல்வித்திறனும் அவர் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

4. நபிமொழியை அறிவிப்பவர் தான் யாரிடமிருந்து நபிமொழியை அறிவிக்கிறாரோ அவரை நேரில் சந்தித்து இருக்கவேண்டும். அதற்கு நேரடியான தெளிவான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

5. இரு அறிஞர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்து, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதற்கான தெளிவான ஆதாரங்களும், கற்றதற்கும் கற்பித்ததற்கும் நேரடியான தெளிவான ஆதாரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

6. தனது ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் ஒருமாணவர் தம் ஆசிரியரியரிடமிருந்து கற்றார் என்பதற்குத் தக்க ஆதாரமும் இருக்க வேண்டும்.

இவ்வாறான பல நிபந்தனைகளில் உரசிப்பார்த்து அதில் முரண்படாமல் தேர்ச்சிபெற்ற அறிவிப்புகளையே இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹூல் புகாரியில் ஸஹீஹ் என்ற தரத்தில் பதிவு செய்தார்கள். மேற்கண்ட நிபந்தனைகளில் உரசிப்பார்த்தால் அதில் தேறும் நிலையில்தான் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு உள்ளதா? என்பதை மக்களே நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.



இன்ஷா அல்லாஹ் தொடரும்....



நன்றி இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 11-04-2013]