தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு
வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?
பகுதி :15
ஏன் இந்தத் தடுமாற்றம்?
பிறைபார்த்த தகவலை ஏற்று அமல்செய்ய மிகப்பெரும் ஆதாரமாகக் கருதப்பட்ட மேற்படி வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பு இட்டுக்கட்டப்பட்டது, பலவீனமானது என்பதை அறிந்து கொண்ட சிலர் அதை எப்படியாவது தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்று இணையதளங்கள் மூலமாக பல்வேறு தவறான செய்திகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர். ஒரு ரிவாயத்து பலஹீனம் என்று தெரிந்துவிட்டால் அதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கும் தூய எண்ணம் கூட இவர்களுக்கு இல்லையா? என்றே கேட்கத் தோன்றுகிறது.
இந்த அறிவிப்பு சம்பந்தமான அவர்கள் வைக்கும் முக்கியமான வாதங்களில் ஒன்று அபூஉமைரைக் குறித்து அல்மீஜானில் கூடுதலாக வரவில்லையா, நஸ்புர்ராய்யாஹ்வில் இதேதொடரில் அடுத்த ஹதீஸ் ஒரு நபித்தோழர் வழியாக அறிவிப்பை ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் அறிவிக்கவில்லையா? என விவாதித்து சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்களை ஒன்றோடு ஒன்றாக இணைத்து குழப்பி தடுமாறுகிறார்கள். அவர்கள் விவாதிப்பதின் உண்மைநிலை இதோ
முதலாவதாக அல்மீஜானில் 7/408-10486 அஸ்ஸஹபீ அவர்கள் அவரைப் பற்றிக் கூறியது :
அபூ உமைர் இப்னு அனஸ் அவரின் தந்தையின் சித்தப்பா அவரிடமிருந்து சூரியன் உச்சியை விட்டு சாய்ந்த பின்னர் பெருநாள் அறிவிக்கப்பட்டதாகவும் மறுநாள் பெருநாள் தொழுகை நடத்;தப்பட்டதாகவும் இந்த அறிவிப்பை போல மற்றொரு செய்தி காணப்படுகிறது. அபூபிஷ்ரு அவரிடமிருந்து ஹதீஸ் பெருவதில் தனித்துள்ளார் - இப்படித்தான் அல்மீஜானில் கூறப்பட்டுள்ளது. இது எந்த வகையில் அபூஉமைரை நம்பகமானவர் என நிரூபிக்கும் என்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக ரிப்யீ பின் ஹிராஷ் அவர்களின் முர்ஸலான அறிவிப்பையும் இங்கு தருகிறோம்:
ரமழானின் கடைசி நாளில் (இது கடைசி நாளா இல்லையா என) மக்கள் கருத்து வேறுபட்டு இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம்
இரண்டு கிராமவாசிகள் வந்து நேற்று இரவு தங்கள் பிறைபார்த்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சி அளித்தார்கள். எனவே நோன்பை விட்டு விடுமாறு நபி (ஸல்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவித்தவர் : ரிப்யீ இப்னு ஹிராஷ், நூல் : அபூதாவூது)
மேலே கூறப்பட்ட அல்மீஜானுடைய செய்தியில் அபூஉமைர் அறிவித்தது போல இன்னொரு சம்பவம் இடம் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அபூ பிஷ்ரு தனிமை படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ரிப்யீ பின் ஹிராஷ் அவர்களின் முர்ஸலான அறிவிப்புக்கும் நாம் ஆய்வு செய்யும் இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான செய்திக்கும் எள்முனையளவுகூட சம்பந்தம் இல்லை. மேலும் மேற்கண்ட இரண்டு முர்ஸலான செய்திகளையும் ஒன்றுதான் என கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
காரணம் இரண்டு சம்பவங்களும் வெவ்வேறானது. அபூஉமைர் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பு வாகனக்கூட்டம் சம்பந்தமானது. ஆனால் ரிப்யீ இப்னு ஹிராஷ்வுடைய முர்ஸலான அறிவிப்போ இரண்டு கிராமப்புறவாசிகள் சம்பந்தமானது என்பதை முதலில் தெளிவாக விளங்கவேண்டும்.
அபூஉமைரை நம்பகமானவர் என காப்பாற்றிவிட சம்பந்தமில்லாத மற்றொரு விஷயத்தை உள்ளே நுழைத்து இந்த இரண்டும் ஒன்றுதான் என்று வாதிடுவது நகைப்பிற்குரியதல்லவா? ஏன் இந்தத் தடுமாற்றம் என்று கேட்கிறோம்?
நாம் விவாதிக்கும் இந்த வாகனக்கூட்டம் செய்தியில் ஸஹாபியை மறைத்து அறிவித்தவர் அபூஉமைர் என தெளிவுபடுத்தியுள்ளோம். அதுபோல அபூதாவூதில் பதிவாகியுள்ள ரிப்யீ இப்னு ஹிராஷ்வுடைய முர்ஸலான அறிவிப்பில் ஸஹாபியை மறைத்தவர் ரிப்யீ இப்னு ஹிராஷ் ஆவார். இருவரின் ரிவாயத்துகளிலும் ஸஹாபி மறைக்கப்பட்டுள்ளார் என்பதிலும், இருவருடைய ரிவாயத்துகளும் முர்ஸல் என்பதிலும் வேண்டுமானால் இருவருக்குள்ளும் ஒற்றுமை உள்ளது என வாதிடலாம். இதை மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர அபூ உமைருடைய ரிவாயத்தோடு ரிப்யீ இப்னு ஹிராஷ்வுடைய முர்ஸலான அறிவிப்பை இணைத்து பேசுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகும்.
மேலும்
நஸ்புராயாவில் இதேதொடரில் அடுத்த ஹதீஸ் ஒரு நபித்தோழர் வழியாக அறிவிப்பை ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் அறிவிக்க வில்லையா? என்று வாகனக்கூட்டம் அறிவிப்பு சம்பந்தமாக பொய்யான செய்திகளை முன்னிருத்தி கேள்விகேட்டு ஹதீஸின் பெயரால் பொய்ச்செய்திகளை மக்கள் மன்றத்தில் பரப்பிடவேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். இதேதொடர், அடுத்த ஹதீஸ், நபித்தோழர் வழியாக என்பதெல்லாம் மக்களை ஏமாற்றுவதாகும், வடிகட்டிய பொய்யாகும்.
வேண்டுமென்று என் மீது பொய்யுரைத்தவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுனார்கள். (நூல் : புகாரி)
வாகனக்கூட்டம் ரிவாயத்து இட்டுக்கட்டப்பட்டதுதான் என்பதை அவர்கள் வாயினாலேயே முதலில் ஒப்புக்கொள்ளட்டும். பிறகு இவர்கள் ஸஹீஹ் என்று நம்பியிருந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு ஒன்றுமில்லாமல் போய்விட்டதால் இதோ ரிப்யீ இப்னு ஹிராஷ்வுடைய அறிவிப்பை எங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாக்குகிறோம் என்று அவர்கள் அறிவிக்கட்டும். அதன் பிறகு நாம் ஏற்கனவே ஆய்வுசெய்துவிட்ட மேற்படி ரிப்யீ இப்னு ஹிராஷ்வுடைய முர்ஸலான அறிவிப்பிற்கும் இதேபோன்று ஒரு புத்தகத்தை நாம் வெளியிடுவோம் - இன்ஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி
Website :
www.mooncalendar.in
[பதிவேற்றிய நாள் : 21-04-2013]