ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான்..! மஃரிபு அல்ல…

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 3 / 7

அஸ்ருத் தொழுகை நடுத்தொழுகையே..!

பகல், இரவு உள்ளடக்கிய ஒருநாள் என்பதில் ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகள் உள்ளன. அந்த ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளில் அஸ்ருத் தொழுகையானது நடுத்தொழுகை என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள். அஸ்ருத் தொழுகைதான் நடுத்தொழுகை என்றால், ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளை ஃபஜ்ரு, லுஹர், அஸர், மஃரிபு, இஷா என்றுதான் வரிசைப்படுத்திட இயலும்.

ஒருநாளுக்குரிய ஐந்து ஃபர்ளான தொழுகைகளில்; ஃபஜ்ரு தொழுகைதான் முதல் தொழுகை என்றால் நிச்சயமாக மஃரிபு வக்திலிருந்து ஒருநாளை தொடங்கிடவே முடியாது. மாறாக ஃபஜ்ரிலிருந்துதான் ஒருநாள் தொடங்குகிறது என்பதை தெளிவாக அறியலாம். இதை முன்னரே தெளிவாக விளக்கியுள்ளோம்.

பகலிலும், இரவிலும் ஐவேளைத் தொழுகைகள் இருக்கின்றன என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி). நூல் : புகாரி : 46

தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். அல்குர்ஆன் (2:238)

நடுத்தொழுகை என்பது அஸ்ருத் தொழுகைதான் என்பதை கீழ்க்காணும் பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகள் வாயிலாக அறிய முடிகிறது.

எண் கிதாபின் பெயர் ஹதீஸ் எண் அறிவிப்பாளர்
1 புஹாரி 6042 அலீ (ரழி)
2 ஷரஹ் மஆனில் ஆஸார் 617 அமர் பின் ராஃபிஃ
3 மஆரிஃபதுஸ் சுனன் 716 ஆயிஷா (ரழி)
4 அஹ்மது 18295 பரா பின் ஆஜிப் (ரழி)
5 தஃப்ஸீரத் தபரி 4936 ஹஃப்ஸா (ரழி)
6 அஹ்மது 19622 ஷம்ரா பின் ஜூன்துப் (ரழி)
7 தஃப்ஸீர் சுனன் சயீத் 376 அபூஹூரைரா (ரழி)
8 தஃப்ஸீர் சுனன் சயீத் 383 இப்னு அப்பாஸ் (ரழி)
9 முஸ்லிம் 1032 ஆயிஷா (ரழி)
நடுத்தொழுகை (ஸலாத்துல் உஸ்தா) என்பது அஸ்ருத் தொழுகைதான் என்று பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகளில் வந்துள்ளதால், ஃபஜ்ருத் தொழுகைதான் ஒருநாளின் முதல் தொழுகை என்று தெளிவாகிறது. அவை ஒருநாளின் தொடக்கம் மஃரிபு என்ற தங்களின் கொள்கைக்கு எதிரான ஆதாரமாக அமைந்து விட்டதால், இதை எப்படி மறுப்பது என்று மாற்றுக்கருத்தினர் சிந்தித்தனர். பின்னர் 'ஸலாத்துல் உஸ்தா' என்பதற்கு நடுத்தொழுகை என்பது பொருளல்ல, அதில் இடம்பெறும் 'உஸ்தா' என்ற சொல்லுக்கு 'சிறப்பான' என்று பொருள் ஆகும். எனவே அது சிறப்புத் தொழுகை என்றனர்.

அப்படியானால் கடமையான ஐந்து வேளை தொழுகைகளில், மற்ற நான்கு தொழுகைகளுக்கும் இல்லாத அஸ்ருத் தொழுகைக்கு மட்டுமே உரித்தான தனிச்சிறப்பு என்ன? என்று நாம் கேட்டு வருகிறோம். நம் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

மேலும் ஹஜ்ஜூக்குச் செல்வோர் ஷைத்தானுக்கு கல்லெறிவதற்காக ஜம்ராத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள மூன்று ஜம்ராத்துகளில் ஒரு ஜம்ராத்தின் பெயர் 'ஜம்ரத்துல் உஸ்தா' என்பதாகும். உஸ்தா என்பதற்கு 'சிறப்பான' என்று அர்த்தம் வைத்தால்;, 'ஜம்ரத்துல் உஸ்தா' என்பதற்கு 'சிறப்பான ஷைத்தான்' அல்லது 'சிறப்பான ஜம்ராத்து' என்று பொருள் கொள்ள முடியுமா?.

கீழ்க்காணும் மற்றொரு ஹதீஸையும் படியுங்கள்.

நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்தி விட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறுகளையும் நெருப்பால் நிரப்புவானாக என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவித்தவர் : அலீ(ரழி) நூல் : புகாரீ – 4533

சூரியன் மறையும் வரை தாமதமாகியது என்றால் அந்தத் தொழுகை அஸ்ருத் தொழுகைதான் என்பது தௌ;ளத் தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது 'ஸலாத்துல் உஸ்தா' என்பதற்கு, 'பகலின் நடுத்தொழுகை' அல்லது 'சாட்சி சொல்லும் தொழுகை' போன்ற ஏதாவது அர்த்தங்களை கொடுத்து குழப்பிவிட இயலுமா என்றும் யோசிக்கிறார்களாம். ஆக மொத்தத்தில் சத்தியத்தை புரிந்துகொள்ள இவர்களின் அரபுப் புலமை பயன்படவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.